நம் குரல்

Saturday, April 30, 2016

மனம் நிறைய பூக்கள் - 1

இலக்கியம் நேசிக்கும் இதயங்களே,

ஒரு கவிதைத் தொடரோடு உங்கள் இதய வாசல் நாடி வருகிறேன்.

எழுத எழுத என்றும் தீர்ந்து போகாமால் கவிதை மீதான காதல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் அரும்பிய இந்தக் காதல் இன்னும் என்னைவிட்டு விலகாமல் ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. கற்பனாதேவியின் மாயக்கரங்களுக்கு என்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிட்டு அவள் போக்கில் பயணப்பட்டுக் கவிதைக்கான தருணங்களை ஆராதிக்கிறேன்.

கண்ணில் விழும் ஒரு காட்சி, காதில் விழும் ஒரு சொல், உரை நடுவே உதிரும் ஒரு சிந்தனை,
வாசிப்பில் கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல் கவிதைக்கான கணங்களை எனக்குள் உற்பத்தி செய்கின்றன.

பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் கவிதை என்றாலே ஒதுங்கிப் போகும் மனங்களைக் காண்கிறேன். கவிதை பேசும் சாடைமொழி பலருக்குச் சலிப்பூட்டுகிறது. எதையும் வெளிப்படையாய்ப் பேசும் உரைநடையோடு மட்டும் கைகுலுக்க விரும்புகிறார்கள். மொழியின் அழகியலை அள்ளிப் பருகும் இலக்கிய மனம் இன்றைய தலைமுறையில் வெகுவாகக் குறைந்துவிட்டதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். கவிதை நூலை நீட்டினால், “கதை நூலிருந்தால் தாருங்கள்” என்று சிலர் சொல்வது இதை மெய்ப்பிக்கிறது

கவிதை தமிழில் தோன்றிய மூத்த வடிவம். சங்க இலக்கியத்தில் ஆரவாரித்துப் புறப்பட்ட கவிதை நதி, ஒல்கி, ஒசிந்து, ஓடையாகி இன்று நீர்க்கோடாகி மனித மனங்களை நனைக்க முயல்கிறது.

ஓர் படைப்பாளியின் மன உணர்வுகளை நெருக்கமாக வாசகன் உணரும் வாய்ப்பினை கவிதை ஏற்படுத்துகிறது. உரைநடையில் உருவாகும் மற்றப் புனைவுகளில் படைப்பாளி தன்னை மறைத்துக்கொண்டு வேறு முகம் காட்டும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. ஆனால், கவிதையோ படைப்பாளியின் வாக்குமூலமாக, அவனின் உணர்வுகளை வாசகனிடத்தில் விரைந்து கடத்துகிறது.

ஆயினும், கவிதையிலும் முகமூடிகள் உண்டு.  இலக்கிய மோசடிகளில் கொடிநாட்டிக்கொண்டு, தன் காலடியில் மனிதர்களை மிதித்துக்கொண்டு, உரத்த குரலில் மனிதாபிமானம் பேசும் முரணான படைப்பாளியும் நம்மிடையே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. 

வாரந்தோறும் கவிதை எழுதுவதைக் கணக்கெடுத்துக்கொண்டு, நான் கவிதைகளை எழுதிக் குவிப்பதாக அவசரத் தீர்ப்பெழுதும்  விமர்சகர்களைப் புறமொதுக்கிவிட்டு  என் கவிதைப் பயணத்தைத் தொடர்கிறேன்.

கவிதையின் அகமும் முகமும் இன்று வெகுவாக மாறிவிட்டன. இனியும் என் கவிதைகளில் சொல் விளையாட்டு, அலங்காரங்கள், பிரச்சாரத் தொனியைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை வாக்குமூலமாக இங்கே பதிவுசெய்கிறேன்.

கவிதைக்கான எதிர்வினைகள் மிகக் குறைவு எனினும், சக பயணியாக உடன் வரும் உங்களுடன், எனக்கான கவிதை மொழியில் உரையாடி, என்னுள் அரும்பிய கலவையான உணர்வுகளை உங்களுக்கு இடமாற்ற இதன்வழி முயல்வேன்.

நம்பிக்கையோடு,

ந.பச்சைபாலன்





                                      காமஞ்செப்பாது..

காமம்
கடக்க முடியாத கடலென்றாலும்
அனைவரையும் நீந்த அழைக்கிறது
மூழ்க வைத்து வேடிக்கை பார்க்கிறது

வேட்கை தீராத வேட்டை நாயாய்
விடாமல் தொடர்ந்து
பலரையும் துரத்தித் துரத்தி
அங்கிங்கெனாதபடி எங்கும் அலைக்கழிக்கிறது

பசியைப்போல் மறைக்க முடியாதெனினும்
அது கண்மூடிப் பொய்த்தூக்கம் கொள்கிறது

காலநேரம் மறந்து எதிர்பார்ப்பைச் சுமந்தவாறு
எப்பொழுதும் விழித்திருக்கிறது

பலரும் அதன்முன் தோல்வியை ஒப்புக்கொண்டு
சரணாகதியடைந்து மண்டியிடுகிறார்கள்

வெற்றிக்கொடி பறக்கும் சாம்ராஜ்யங்களை
ஆசைதீர அசைத்துப் பார்க்கிறது
கவிழ்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது

யாரும் அசைக்க முடியாதென்று நினைத்த
அதிகார பீடங்களைத் தாக்கித்
தரைமட்டமாக்குகிறது

ஒளிந்துகொள்ள இடம் தேடி
பாதுகாப்பெனத் தேர்ந்து
காவியுடையில் மறைந்துகொள்கிறது

முகமூடி அணிந்துகொண்டு
காதலெனும்பேரில் இனிக்கப் பேசுகிறது

அது 
அத்தனை அழகாகவும் இருக்கிறது

இளைய மனங்களின் அறைகளில்
ஒட்டியிருக்கும் தூசிகளைத் துடைக்கிறது

மலரைவிட மெல்லியதாய்
மனங்களை ஈர்க்கிறது

அதனோடு போராடி வெல்வார்முன்
வேறுவழியின்று
அது மண்டியிடுகிறது

இதனை மறுத்தோ கடந்தோ
கடவுளைத் தேடிச் சிலர்

இதன் வழியாகக்
கடவுளைத் தேடிச் சிலர்

No comments:

Post a Comment