நம் குரல்

Friday, December 9, 2011

அவசரப் பிரிவில் அரைநாள்




யாரையோ தேடி
மருத்துவமனை வந்த நீங்கள்
இங்கே அவசரப் பிரிவில் நுழைந்தது
எதார்த்தமானது

உங்களைக் கடந்துபோகும்
மருந்துநெடிகளை
வெள்ளை ஆடைகளில் பரபரக்கும்
தாதிகளை மருத்துவர்களை
தரையில் சிந்தும் இரத்தத் துளிகளை
உறவினர்களின் கதறல்களை விசும்பல்களை
மூடிய கதவுக்கு முன்னால்
தவிக்கும் முகங்களை
வாசலில் தயார்நிலையில் நிற்கும் ஆம்புலன்ஸை

எதையும்
கடக்க முடியாமல் திகைத்து நிற்கும்
உங்களிடம் யாரோ ஒரு மூதாட்டி
தன் நெருங்கிய உறவுக்கு நேர்ந்த துயரம்பற்றி
அழுதுகொண்டே
பகிர்ந்துகொள்ள வருகிறார்

நீங்கள் அங்கிருந்து
வெளியேற மறந்து
அவரின் அருகிலமர்ந்து
துயரக்கதை கேட்கத் தயாரானது
அபூர்வமானது


No comments:

Post a Comment