நம் குரல்

Friday, July 15, 2011

அமைதிப் பேரணிக்கு முன்னும் பின்னும்


அமைதிப் பேரணிக்கு முன்:

சாலையை அடைத்துக்கொண்டு
புகைகக்கிப் பறக்கும்
வாகனங்களின் இடுக்குகளில்
மனிதக் கால்கள் பதியும் சாலை நெடுகிலும்
பேரங்காடி, பேருந்து - இரயில் நிலையங்களில்
உணவகங்களில் ஓயாது அசையும் உதடுகளில்
ஏடுகளின் முதல் பக்கங்களில்
எங்கும் நீக்கமறக் நிறைந்து
வழிந்துகொண்டிருந்தன

மிரட்டல்கள்
கண்டன அறிக்கைகள்
பயமுறுத்தும் குறுஞ்செய்திகள்
பீதி கிளப்பும் புரளிகள்
பிடிவாதங்கள்
போலீஸ் புகார்கள்
சட்ட நுணுக்கங்கள்
ஊகங்கள்
எதிர்பார்ப்புகள்
வேடிக்கை விரும்பிய இதயங்கள்
நீதிமன்றத் தடைகள்
எக்காளக் குரல்கள்

அமைதிப் பேரணிக்குப் பின்:

வெறிச்சோடிய சாலைகளில்
அங்கங்கே சிதறிக்கிடந்தன
காலணிகள்

கனிமநீர் பாட்டில்கள்
நெகிழிப்பைகள்
காகிதக் குப்பைகள்
உடைந்த பொருள்கள்

சுதந்திரமாய்
வண்ணங்களில் நனைந்த
வண்ணத்துப்பூச்சிகள்
வாகனமற்ற சாலைகளில் பறக்க
சாலைநெடுக உயர்ந்த கட்டடங்கள்
அழகை முழுதுமாய்க் காட்ட
மழைக்குப் பிந்திய வானம்
கட்டட இடுக்குகளில் வண்ணம் தோய்க்க
பயத்தில் மூடிக்கொண்ட
வாணிப நிறுவனத்தின் கதவுகள்
மூடியே கிடக்க

எதிர்பாராப் பணிமுடித்துக்
களைத்துத் திரும்பிக்கொண்டிருந்தன
போலீஸ் வாகனங்கள்


1 comment:

  1. vannattuppoochigalaavathu suthantiramaai parakka vendum avvappothu peranigal

    ReplyDelete