நம் குரல்

Sunday, May 1, 2011

யாரும் யாருடனாவது..


யாரும் யாருடனாவது
இருக்க வேண்டும் என்கிறீர்கள்

தனியாக இருப்பதைக்
தகுதிக் குறைவாகச் சொல்கிறீர்கள்

நான் அங்கே போய்விட்டதாக,
நான் இங்கேதான் இருப்பதாக
அவரவர் கணக்கில்
என்னைப் பதிந்துகொள்கிறீர்கள்

குழுவாகச் சேர்ந்து கல்லெறியும்
கூட்டத்தில் என் முகம் தேடுகிறீர்கள்

ஆள் சேர்ந்தால்தான் முன்மொழிந்து,
வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்ற
வசதியென்கிறீர்கள்

என்னைச் சுற்றிக் கட்டப்பட்ட கயிறுகளை
எப்போதோ கழற்றிவிட்டேன் என்கிறேன்
நம்ப மறுக்கிறீர்கள்

என்னை இதுகாறும் புதைத்த
பொதுமையிலிருந்து மீட்டெடுத்துத்
தனிமையிடம் தந்துவிட்டேன் என்கிறேன்
கேலி பேசுகிறீர்கள்

கட்டற்ற காற்றோடு கைகுலுக்கி
திசைகளற்ற வெளிகளில் கைவீசி நடப்பதின்
இன்பத்தைச் சிலாகித்துப் பேசுகிறேன்

வெறுப்பை உமிழ்ந்தவாறு
என்னைக் கணக்கிலிருந்து கழித்துவிட்டு
யாருடனாவது சேர்ந்துகொள்ள
புறப்படுகிறீர்கள்

(தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூர்)
www.thangameen publications (April issue)

No comments:

Post a Comment