நம் குரல்

Sunday, April 17, 2011

எதை இம்முறை?


ஒவ்வொரு முறையும் தங்கத் தட்டில்
எங்கள் விசுவாசத்தை இட்டு நிரப்பி
உங்கள் காலடியில்
தாரை வார்த்துக்
கைகளை ஏந்தினோம்

எங்களைப் புரிந்துகொண்டதுபோல்
புன்னகையைப் பரிசளித்தீர்கள்
உங்கள் இதழ்களின் மலர்ச்சியை
இதயங்களில் ஏந்தி
புளகாங்கிதம் அடைந்தோம்

ஒவ்வொரு முறையும்
காறி உமிழ்ந்தீர்கள்
கைக்குட்டையையும் தந்தீர்கள்
எச்சிலைத் துடைத்தோம்
எரிச்சலை மறந்தோம்

ஒவ்வொரு முறையும்
காவடிகள் ஏந்தி
கருணை வரம் வேண்டி
அதிகாரப் படிகள் ஏறினோம்
எங்கள் பக்தியை மெச்சினீர்கள்.

ஒவ்வொரு முறையும்
அடிப்படைத் தேவைகளுக்காக
உங்கள் மனக் கதவுகளைத்
தட்டித் தட்டித் தளர்ந்தோம்
கதவுகளுக்குப் பின்னால்
உங்களின் பரிவான குரல்
கேட்டுக்கொண்டே இருந்தது

அவ்வப்போது
காயம் ஆறாப் புண்களைக்
கிளறுவீர்கள் சீழ் வடியும்
மறவாமல் உடனே
களிம்பு தடவுவீர்கள்
கிளர்ச்சி பெறுவோம்

எப்போதாவது
கிச்சுகிச்சு மூட்டுவீர்கள்
வாய் வலிக்கச்
சிரித்து வைப்போம்

பசியால் அழுதோம்
நொறுக்குத் தீனிகளைக்
கைகளில் கொடுத்து
பைகளில் சில்லறைகளைத் திணித்து
சமாதானம் சொன்னீர்கள்

மீண்டும்
தங்கத்தட்டு ஏந்தி
உங்கள் காலடி நோக்கி வருகிறோம்
தட்டில் எதை இட்டு நிரப்புவது
இம்முறை?

சிந்திக்கத் தூண்டுகிறது
கொஞ்சம் மிச்சமாய்
உணர்விலும் உயிரிலும்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
சூடும் சுரணையும்


No comments:

Post a Comment