நம் குரல்

Thursday, February 24, 2011

எனக்குள் யார் யாரோ


மௌனம் போர்த்திய வாசிப்பு அறையின்
புத்தக அடுக்குகளில்
ஆண்டாண்டு காலமாய்
அவர்கள்
பொறுமையாய்க் காத்திருக்கிறார்கள்

உள்நுழையும் காலடி ஓசைக்காக
ஏக்கங்களைச் சுமந்தபடி
அவர்களின் காத்திருப்பு நீளுகிறது

முகம் தெரியாத அவர்களின் குரல்
மௌன அலைவரிசையில்
அறையெங்கும் உரத்து ஒலிக்கிறது

உள்நுழைந்து ஆசையாய்
புத்தகப் பக்கங்களைப் புரட்டுகையில்
கண்விழித்து கனிவாய்
என்னை நெருங்குகிறார்கள்

அவர்களைக் கைகுலுக்கி வரவேற்கிறேன்
என்னுள் நுழையும் அவர்களுக்கு
என் இதயத்தைத் திறந்து வைக்கிறேன்

கையோடு கொண்டு வந்த எதைஎதையோ
எனக்குள் பரிமாறுகிறார்கள்

அவர்களைப் பிரிந்த பிறகும்
அவர்களோடு கழிந்த நாட்கள்
இன்னும் தேங்கிக் கிடக்கின்றன
என்னுள்ளே சில கனவுகளாய்..
கவிதைகளாய்..
கரைந்துபோகாத சித்திரங்களாய்..

போனதாக நினைத்தவர்களின் குரல்
மனவெளிகளில் நீக்கமற
கேட்டுக்கொண்டே இருக்கிறது

உங்களிடம் பேசிக்கொண்டே
உங்களுக்குக் கேட்காமல்
அவர்களிடமும் பேசுகிறேன்

என்னைக் கொன்றுவிட்டு
என்னையே முகமூடியாய் அணிந்துகொள்ள
அவர்கள் முயலும்போதெல்லாம் தடுக்கிறேன்

அவர்களை அடையாளம் காட்டச் சொல்கிறீர்கள்
மறுக்கிறேன்
ஒன்றுக்குள் ஒன்றாக
அவர்களின் முகங்கள் கலந்து
புதிய முகங்கள் உருவாகின்றன

யார் யாரோ பட்டியலில்
நீங்களும் இருக்கலாம்
நீங்கள் அறியாமலே!


1 comment:

  1. எனக்குள் யார் யாரோ
    வந்து போகிறார்கள்
    தினமும்

    நான் யார்
    எனக்கு அடிக்கடி
    மறந்து போகிறது.

    ReplyDelete