நம் குரல்

Thursday, February 10, 2011

காதலின் தடயங்கள்



காதலின் தடயங்கள் அழுத்தமானவை
நினைவு அடுக்குகளின் அடியில் சிக்கினாலும்
ததும்பித் ததும்பி அவை மேலெழும்

மறதி நோய்க்கு மாளாமல்
எந்த நிவாரணிக்கும் மசியாமல்
நெடுநாள் நின்று உயிர் தின்னும்

காலத்தின் சீறிப்பாயும் அலைகளும்
அவற்றை அழிக்க முடியாமல்
பின்நகர்ந்து விடுகின்றன

அந்திம காலம்வரை நெஞ்சின் ஓடையில்
கூழாங்கற்களாகவோ
ஆங்கார அருவியாகவோ
ஓசை எழுப்பும்

ஏதாவது பாட்டு வரிகளின் இடைவெளிகளில்
கண்சிமிட்டும் கவிதைகளின் நளினங்களில்
அவளின் முகத்தை வரைந்து ரணமாக்கும்

நினைவுப் புதர்களில் மறைந்திருந்து
எப்போது தலைநீட்டிப் பார்க்கும்
சொல்லவே முடியாது

உள்ளங்கவர் கள்ளியாய் உள்ளே புகுந்து
சுவடில்லாமல் வெளியேறிவிட்டாலும்
நீக்கமற நிறைவது அவளேதான்

சாலையோர மழைநீரில்
தலை நனைக்கும் குருவியாய்
அவளின் நினைவுகளில் மூழ்கியெழும் மனசு

காதலில் வென்றவரைவிட
தோற்றவர் மனங்களில்
தோரணமாய் தொங்கும்
அவளின் பிம்பங்கள்


No comments:

Post a Comment