நம் குரல்

Thursday, January 6, 2011

அன்புமகள் கனிமொழிக்கு...


காலச்செடியில்
மீண்டுமொரு மலர் பூக்கிறது
உன் பிறந்தநாளின் நினைவுகளை
உடன் அழைத்து வருகிறது

நினைவுகளூடே
நீ இந்த பூமிக்கு வந்த
அந்த ஞாயிற்றுக்கிழமையின் குதூகலம்
அடி மனத்தில் ஆழத்தில்
இன்னும் அப்படியே..

முதல் முத்தம்
முதல் காதல்போல
முதல் குழந்தை வருகையும்
எப்பொழுது நினைத்தாலும்
மனக்குளத்தில் கல்லெறிந்து
அலைகளாய் விரிகின்றது...

கல்விச் சாலையில்
நீ ஒவ்வோர் இலக்கிலும்
வெற்றிமாலை சூடி
பயணத்தைத் தொடர்ந்தபோது
சகபயணியாக
உன் வெற்றியைக் கொண்டாடினோம்

இன்னும் உன் பயணம்
தொடர்கிறது...
எதிலும் நீ வெற்றிகானம் மீட்ட
மனம் எப்பொழுதும்
வாழ்த்துத் தந்தி அனுப்பி மகிழ்கிறது

சொத்துகள் சேர்ப்பதிலே
எப்போதும் ஆர்வம்
இருந்ததில்லை எனக்கு
பிள்ளைகளாய் உன்னோடு
இன்னும் இருவரை
ஆசைச் சொத்தாய் அடைந்த பிறகு..

கவிஞனாய் இதுவரையில்
எதையெதையோ பாடினேன்
ஒரு கவிதையான
உன்னைப் பாடாத
குறையின்று தீர்த்தேன்

21 ஆண்டுகளுக்கு முன்பு
உன் முதல் பிறந்தநாளில்
மனத்தில் எழுதிப்பார்த்த வரிகளை
மீண்டும் நினைவுச் சரத்தில் கோர்க்கிறேன்:

‘என்றுமுள தென்தமிழாய்
நன்று புகழ் நீ பெறவும்
குன்றா நலனில்
என்றும் நிறையவும்
இன்று உன்றன் பிறந்தநாளில்
அப்பா நான்
ஆசையாய் வாழ்த்துகிறேன்!’

(8.1.2011 அன்று 22ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் அன்புமகள்
கனிமொழியாளுக்கு என் வாழ்த்துக்கவிதை)





No comments:

Post a Comment