நம் குரல்

Monday, January 3, 2011

நோயெனப்படுவது யாதெனின்



வேகம் காட்டிய காலம்
சுவர்க் கடிகாரத்தின் முட்களில் மாட்டி
நகர முரண்டு பிடித்த அதிசயம்

வாசிப்பின் ருசி தேடி
மனசின் நாக்கு அலைய
மேசையில் நிறைந்த நூல்கள்
ஆசையாய் உள்ளிழுத்தன

இயந்திர கதியில் சிதறிய கவனம்
குவிமையமாய்
உடலின் மீது பரவியது

உறவுப் பறவைகளின்
அன்பில் அரவணைப்பில்
கசிந்த சொற்கள்
சிறகுகோதி மனம் வருடின

நான்கு சுவர்களுக்குள் அடைந்தாலும்
கற்பனையின் குதிரை ஏறியதில்
அடிக்கடி வெளிப்பயணம் சாத்தியமாயிற்று

முன்னிலும் தீவிரமாய்
தூக்கத்தின் மர்மக் கைகள்
தாவிப் பிடித்து அணைத்தன

சுற்றியிருந்த உதடுகள்
ஓயாமல் உச்சரித்ததில்
கடவுளின் நாமம்
உணர்வை நனைத்து
உதடுகளில் உறவாடத் தொடங்கியது

மரணத்தின் கோர முகம்
முதன்முறையாய் தலைக்கு மேலே
தொங்கி உற்றுப் பார்த்தது

‘நோயில் இருந்த நாட்கள்
கணக்கில் இறந்த நாட்கள்’
நாட்குறிப்பின் வாசகத்தைக்
கிழித்து வீசினேன்

No comments:

Post a Comment