நம் குரல்

Thursday, October 21, 2010

தீபங்கள் பேசட்டும்!



தீபங்கள் பேசட்டும்
தீமைகளைப் பொசுக்கட்டும்
கோபங்கள் குறையட்டும்
கொடுமைகளும் மறையட்டும்
சாபங்கள் விலகட்டும்
சாதனைகள் மலியட்டும்
தாபங்கள் தீரட்டும்
தடையாவும் நீங்கட்டும்!

உணர்வுகளும் பூக்கட்டும்
உரிமைகளைக் காக்கட்டும்
மனங்களெல்லாம் இணையட்டும்
மகிழ்ச்சியிலே திளைக்கட்டும்
குணங்களையும் வளர்க்கட்டும்
குறையாவும் ஒடுங்கட்டும்
இனநலத்தைப் பேணட்டும்
எழுச்சியிங்குக் காணட்டும்!

ஒளிவெள்ளம் பரவட்டும்
ஊரெல்லாம் ஒளிரட்டும்
விழியெல்லாம் நன்னாளை
விழித்திருந்து நோக்கட்டும்
துளித்துளியாய் நம்வாழ்வு
துயரழித்து மீளட்டும்
வழித்துணையாய் இனவுணர்வு
வாழ்நாளும் தொடரட்டும்!

தொன்றுதொட்ட வாழ்நெறிகள்
தொடராகித் துலங்கட்டும்
ஒன்றுபட்ட நல்லினமாய்
ஓரணியில் திரளட்டும்
இன்றெங்கள் சாதனைகள்
ஏறுமுகம் காணட்டும்
என்றுமிந்த நன்னிலையே
இம்மண்ணில் நிலைக்கட்டும்!

வீணான சண்டைகள்
வேர்பட்டுச் சாகட்டும்
வீணான புன்மொழிகள்
வீரியத்தை இழக்கட்டும்
தானாக நம்பிணக்கு
தணிந்திங்கு மறையட்டும்
தூணாக எழுதுகோலும்
துணையாகிக் காக்கட்டும்!

வன்முறையும் பாழ்நெறியும்
வாழ்விழந்து போகட்டும்
அன்புவழி எங்கள்நெறி
அந்தநிலை ஓங்கட்டும்
பண்புமிகக் குமுகாயம்
பண்பாட்டில் நிமிரட்டும்
இன்னமுதத் தமிழெங்கள்
இதயத்தில் நிறையட்டும்!

No comments:

Post a Comment