நம் குரல்

Monday, September 20, 2010

ஒவ்வொரு மரமும்..



குளிர்சாதனப் பறவைகளின் மெல்லிய கீச்சொலிகள்
நிறைந்து வழியும் காட்டிற்குள் நுழைகிறேன்

எங்கும் முகங்காட்டும் புத்தக மரங்கள்
என்ன இருகை நீட்டி வரவேற்கின்றன

வெளியுலகின் பரபரப்புகள் நீங்கி
மௌனத்தின் ஆட்சியில் மூழ்கிய இடம்

மனித நடமாற்றம் குறைந்து
ஒரு சிலர் மட்டும் வாசம்புரிவதைக் கண்டேன்

யார் யார் நடந்துபோன பாதைகளின் சுவடுகள்
மூலைக்கொன்றாய்த் தெரிகின்றன

யார் யாரோ சொல்லிவிட்டுப் போன
வாழ்வின் இரகசியங்கள் அனுபவங்கள்
சிந்தனைச் சேமிப்புகள்
காடெங்கும் கொட்டிக்கிடக்கின்றன

அவரவர் தலை குனிந்தவாறு
அந்த இரகசியங்களை அவிழ்த்து
ஆராயக் கண்டேன்

பசித்த மனத்தோடு
புத்தக மரமொன்றின் அடியிலமர்ந்து
ஆனமட்டும் முயல்கிறேன்

கொஞ்ச நேரத்தில்
என்னைத் தனக்குள் இழுத்துக்கொண்டு
வேர்களைப் பிடுங்கியவாறு
மண்ணிலிருந்து விடுபட்டு மேலெழும்பி
புதிய பாதைகளில் திசைகளில்
காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கிறது
அதனோடு நானும் பறக்கிறேன்

அது தந்த அனுபவத்தில் மூழ்கி மூழ்கி
கிளர்ச்சியில் மனம் திளைத்துப்
பயணம் முடித்து
மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்புகிறேன்

அந்த அற்புத அனுபவத்தில்
கைம்மண் அளவாவது கிட்டியதா

கையை விரித்தேன்
கிடைத்தது
நிலக்கடலை அளவுதான்

கடல்நீர் முழுதும் குடிக்க முயன்று
தோற்ற கயலாய்..
இனிப்புக் குவியல்முன் மலைத்துப்போன
சிற்றெறும்பாய்..

கண்முன் விரிந்து கிடக்கும்
அந்தக் காட்டை அதிசயமாய்ப் பார்க்கிறேன்

வாழ்ந்து மறைந்த முன்னோரின் முகங்கள்
மரங்களில் இலைகளில் பதிந்திருந்தன

தவித்துக்கிடக்கும் மனங்கள்
எத்தனை முறை அதனுள் போய்வந்தாலும்
தீர்வதில்லை தாகம்

போதிமரத்திற்காக
புத்தன்போல் அலைந்து திரிந்து
தேடிக் களைத்து அவதியுறாமல்

நம் முன்னே நிமிர்ந்து நின்று
தன் மடியில் கிடத்தி நம்மை அரவணைக்க

காத்திருக்கின்றன
ஒவ்வொரு மரமும்..

No comments:

Post a Comment