நம் குரல்

Thursday, March 18, 2010

எல்லாம்..


கோயில் உபயத்தில்
எல்லாம் இருந்தன

தேங்காய், வாழைப்பழம், சூடம், சாம்பிராணி
கும்பம், பூ, ஊதுபத்தி, திருநீறு, குங்குமம்,

மந்திரம் சொல்லும் ஐயர்
உபயத்தில் கலந்துகொள்ள உறவினர்கள்
வழக்கமாய் வரும் பக்தர்கள்

கும்பாபிஷேகம் கண்டு
பொலிவாய் வண்ணத்தில் காட்சிதரும்
திருக்கோயில்

அதற்கும் மேலாய்
நான் வழிபடும் திருமுருகன்

எல்லாம் இருந்தன
என் உயிர்த்தமிழைத் தவிர

Sunday, March 14, 2010

வீடு



பாதை நெடுக புற்கள் மண்டி
சிமெண்டுத் தரை மண்ணிலில் புதைய
சாயம் வெளுத்த பலகை மக்கி
பச்சைத் தாவரம் எங்கும் பரவ
கலைந்து கிடந்த வீட்டின் முன்னே
நான் நின்றேன் தனியாக
மனைவி பிள்ளைகளோடு

என் முன்னே
இன்னும் நிறம் வெளுக்காத வீடு
படுத்துறங்கிய சிமெண்டுத் தரை
என் புத்தக அலமாரி
அழகான லயங்கள்
என்னோடு விளையாடும் தோழர்கள்
வாசலில் படுத்திருக்கும் நாய்
வீட்டுக்கு ஓடிவரும் செவல ஆட்டுக்குட்டி
சாயுங்கால பரபரப்பு மனிதர்கள்
இரவில் நிலா பார்க்கும் பிராஞ்சா
அப்பா, அண்ணனைக் கிடத்தி
கத்திக் கதறிய வாசல்..

என் கையைப் பிடித்து இழுத்து
மகள் கூறுகிறாள்:
“அப்பா, இந்த வீட்லயா இருந்தீங்க?
வாங்க போகலாம்”

கை நிறைய சாணி



அப்பெல்லாம்
ஒவ்வொரு நாளும் சாணி
எங்கையில

தோட்டப்பள்ளியில
மணி அடிச்சா
வீட்டுக்கு ஓடுவேன்
குசினிப் பானையில
ஆறிய பழச
அள்ளிக்கொட்டிக்கிட்டு
பட்டிக்கு ஓடுவேன்

போனா..
பத்து மாடும் போயிருக்கும்
மேச்சலுக்கு
பாத்தா..
பட்டி முழுக்க
ஒரே சாணியாயிருக்கும்

அள்ளுவேன்..
எல்லாத்தையும் அள்ளுவேன்
ரெண்டு கையால

எங்காவது கொல்லையில
வறட்டு கொய்யாக்கா கெடைக்கும்
கடிச்சிக்கிட்டே திரும்புவேன்

எப்படிக் கழுவினாலும் போவாது
நாள் முழுக்க மணக்கும்
கையில சாணி

சாணி, மாட்டுப்பட்டி, தோட்டம்
எல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு

பின்னாடி, எங்காவது மாடுகள பாத்தா
பொசுக்கின்னு எட்டிப்பார்க்கும்
பழைய நெனப்பு
சாணி வாசம் மூக்கை தொளைக்கும்

இப்பெல்லாம் சாணி ஞாபகம்
கொஞ்சம் கொஞ்சமா குறையிது
கையை பாத்தா
சாணி இல்ல
வாசம் இல்ல

இப்ப என் எதிரிங்க கையில சாணி
எங்கையில
எழுதுகோல்

வெறுமை



வண்ணமும் வாசமும் இழந்தன
சோலைப் பூக்கள்

வெறுப்பைத் தந்தன
பூக்களில் அமரும் வண்டுகள்

என்னை ஏளனம் செய்தன
ஜோடிப் புறாக்கள்

வீசும் தென்றலில் இல்லை
எப்போதும் இருக்கும் இதம்

முகம் நிறைய கேள்விகள்
என்னைக் கடக்கும் தோட்டக்காரர்

இருக்கை விட்டு
நகர மறுத்தன கால்கள்

வேகமிழந்து நொண்டின
கடிகார முட்கள்

காற்று வெளிகளில்
நிறைந்து வழிந்தது வெறுமை

அவள் வராத நாள்

Tuesday, March 9, 2010

வீடு பற்றிய குறிப்புகள்



1
சாய்ந்துகொள்ளும் தோளாக இருந்த வீடு
என்னிலிருந்து விலகி நின்று
என்னை அந்நியனாகப் பார்த்தது

வெளியில் போய்விட்டு
திரும்பும் போதெல்லாம்
முன்புபோல் இருகை நீட்டி வரவேற்காமல்
என்னுடன் மௌனம் பேசியது

சேமித்து வைத்த சொற்களைச்
செலவளிக்கத் தெரியாமல்
வெறுமையாயிருந்தேன்

எனக்கும் அதற்கும் இடையே
மௌனத்தை நிரப்பிவிட்டு

என் உறவின் உணர்வுகளைத்
தனக்குள் இழுத்துக்கொண்டு
உரக்கப் பேசிக்கொண்டிருந்தது
தொலைக்காட்சி

2
நினைவின் நதியில்
நீந்தி நீந்திக்
கரையேறிக்கொண்டிருக்கிறது
பழைய வீடு

அதன் சன்னலோரத்தில்
மாலைநேரத் தேநீர்க் கோப்பையோடு
மகிழ்ச்சி பொங்கும்
என் முகத்தை மாட்டி வைத்திருக்கிறது

உள்ளேயிருந்து வெளியேறும்
எல்லா முகங்களும்
கரைந்து போகாமல் சேமிக்கிறது

உடைந்த பலகைகள்
உருக்குலைந்த சிமெண்டுத்தரை
இவற்றின் சித்திரத்தைத்
தன்மேல் வரைந்திருக்கிறது

கரையேறிய வீடு
என் வீட்டிற்குள் நுழைந்து
ஓவியமாய் நிற்கும்
அதன் படத்தில் நுழைந்து
என்னையும் உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது

3
வெளியில் பயணப்பட்ட
கால்களின் பாதைகள் எல்லாம்
தொடங்கிய இடம் தேடி வர
தன் கதவுகளைத் திறந்து
உள்ளிழுத்துக்கொள்கிறது வீடு

எல்லா அறைகளிலும்
இன்னும் சொல்லாத கதைகள்
புதைந்து கிடக்க
தன் இதழ்களில்
புன்னகையைப் படரவிடுகிறது

வீட்டிலிருந்து புறப்பட்ட
பல இரகசிய வழிகளில்
கசிந்துகொண்டிருக்கின்றன
குதூகலமும் கண்ணீரும்
கனவுகளும் கற்பனைகளும்

உள்ளே நுழையும்
ஒவ்வொருவரையும் படமெடுத்துக்கொண்டு
வெளியே செல்ல அனுமதிக்கிறது வீடு

4
மௌனம் பூசிய வீட்டின் சுவரில்
காது வைத்துக் கேட்டேன்
விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது
எனக்கு மட்டும் புரிந்த
அதன் முனகல் மொழி

கோபத்தின் உச்சியில்
வீசியெறிந்ததையும்
அன்பின் நெகிழ்ச்சியில்
கரைந்ததையும்
காதுகளில் ரகசியமாய்ப்
பரிமாறப்பட்டதையும்
கலவியில் மெதுவாய்க்
கசிந்ததையும்
ஒன்றுவிடாமல் தனக்குள் வாங்கிச்
சேமித்து வைத்திருக்கிறது

தனிமை என்னைத் தழுவும்போதெல்லாம்
சேமித்த மொழிகளை
என் முன்னே அவிழ்க்கத் தொடங்குகிறது
அவற்றோடு குரல்களும் முகங்களும்
சேர்ந்தே வருகின்றன

ஆண்டுக்கொருமுறை சாயம் பூசி
அதன் நிறத்தை மாற்றினாலும்
பழைய மொழிகளைச்
சுருதி மாறாமல்
ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறது

அதன் மேல் தலைநீட்டிப் பார்க்கும்
பல்லியைப்போல்
சேமித்த அதன் மொழிகளுக்குள் நுழைந்து
கரையேறிக்கொண்டிருக்கிறது மனது