நம் குரல்

Thursday, February 18, 2010

காலமாகாத கவிதை


எளிமையானது உன் கவிதை
ஆடம்பர அணிவகுப்புகளை இரசிக்க
இதயம் தவிப்பவர்களுக்கு
இடமில்லை உன்னிடம்

சாலையோர மரங்களின் இலைகளில்
படிந்து கிடக்கும் மண்துகள்களாய்
உன் கவிதைகளில் உன் அனுபவங்கள்

உன் போக்கில் நீ முன்னால் பயணமானாய்
பின்னால் வரும் வாசகர்களின்
உணர்வுக்காக பயணத்தைத் தாமதித்ததில்லை

கட்டுமானப் பகுதியில்
ஒவ்வொரு செங்கல்லாய் அடுக்கும் இடத்தை
நீ கடந்திருப்பாய் யினும்
உன் கவிதையில் அதன் பாதிப்பு இராது

நீ வித்தையேதும் கற்றவனில்லை
ஆயினும் வேகமாக ஓடும்
எந்த வாசகனும் உன் கவிதை கடக்கையில்
வேகம் குறைக்கிறான்

நீ வீண் செலவுகளை விரும்பிச் செய்பவனல்லன்
உன் கவிதையில்
நீ எண்ணியெண்ணிச் செலவு செய்வதை
விருந்துக்கு வந்தவர்களுக்கு உணர்த்துகிறாய்

உரத்தக்குரல்களில் கத்தல்களையும்
போலிப் பிரசாரங்களையும் நீ வெறுத்தவன்
உன் கவிதையில் நீ தனியனாய் மேடையில்
ஒலிபெருக்கியோடு ஒதுங்கியதில்லை

எளிய மக்களின் இன்னல்களை
இதயத்தில் ஏந்தியவன் நீ
அவர்களின் காயாத கண்ணீர்ச் சுவடுகளை
உன் கவிதையில் வரைந்துகொண்டே இருந்தாய்

அமைதியானது உன் கவிதை
ஊரடங்கிய வேளையில்
புறம்போக்கு நிலத்துக் குடிசையில் நிகழ்ந்த
உன் மரணத்தைப்போல

No comments:

Post a Comment